Thursday, February 24, 2011

பெற்றோர்,பிள்ளைகளின் நிலை???

ஸாதிகா அக்கா அவர்களுடைய *** பெற்ற மனம் பித்து *** எனும் கவிதையை படித்ததும்,எனக்கு நீண்ட நாட்களாக மனதில் உதித்த விஷயம் இன்னும் ஆழமாக நிற்க்க ஆரம்பித்துவிட்டது.அவற்றை உங்களோடு பகிர்ந்தால் தான் என்ன? என்று நினைத்தே வந்தேன்.ஏதேனும் தவறாக எழுதியிருப்பின் சுட்டிக்காட்டவும்.

 
ஸாதிகா அக்கா தாயின் சிறப்பையும் சொல்லி இத்தனை பாசமாக மற்றவர்களுக்கு இடையே வளர்த்த மகனே தன்னை பிரச்சனை என்று நினைக்கும் காலத்தை சொல்லியிருப்பது சில இடங்களில் நடப்பதே....
இது இன்றைய காலக்கட்டத்தில் நடக்கும் வேதனை மிக்க விஷயம் என்பது ஒரு பக்கம் இருப்பினும்,பலவித சூழ்நிலைகளால் பல பெற்றோர்கள் தனிமையில் இருப்பதும் மற்றொரு நிலை.
அவர்களின் மகன்கள் அதிக பாசத்துடனும்,.அக்கறையுடனும் இருப்பார்கள்.மருமகளும் அதே போல் அதிக அக்கறையுடனும்,பாசத்துடன் இருப்பாள்.இப்படி இருப்பினும் இவர்கள் சேர்ந்து வாழமுடியாத  சூழ்நிலை.. ஏன் என்கிறீர்களா...?வெளிநாட்டில் மகன்கள் பிழைப்பிற்க்காக குடியேறி மனைவி,குழந்தைகளுடன் வாழும் நிலையே அதற்க்கு காரணம்.வருடத்திற்க்கு ஒரு முறை பிள்ளைகள் சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் இருந்துவிட்டு போவதோ... அல்லது பெற்றொர்களை முடிந்த போது வெளிநாட்டிற்க்கு வரவழைத்து ஒரு மாதமோ,அதற்க்கு மேலோ அவரவர் விருப்பம்போல் இருந்து விட்டு செல்வதுமே இருந்து கொண்டிருப்பது இன்றைய நடைமுறையின் சூழ்நிலை.இதில் பார்த்தீர்களேயானால் அவர்களிடையே நல்ல சுமூகமான உறவுகள்,கலந்துரையாடல்கள் என இருந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டி மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் மகனுக்கு  “அம்மா,அப்பா தனிமையாக இருக்கின்றார்களே...” என்ற கவலையும், “நாமும் பேரன்,பேத்திகளிஉடன் இந்த வயதான காலத்தை தள்ள மாட்டோமா...” என்று பெற்றொர்களின் வருத்தமும் இல்லாமல் இருப்பதில்லை.இது மனித இயல்பு.ஏன் இந்த நிலை...? “சொந்த நாட்டில் இருந்து கொண்டு ஏதோ ஒரு வேலையில் இருந்து கொண்டு எல்லொரும் ஒன்றாக இருந்தால் என்ன?”இது சிலர் ஆங்காங்கே எழுப்பப்படும் கேள்வி.இதற்க்கு பலவிதமான காரணங்களை நாம் சொல்ல முடியும். மகன் அவசரஅவசரமாக படித்து முடித்து விட்டு குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு சீக்கிரம் நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இருந்து கொண்டிருக்க அவர்கள் படிப்பிற்க்கு ஏற்றவாறு அவர்களின் வேலை பார்த்த கம்பெனியின் மூலமாக வெளிநாட்டிற்க்கு மாற்றுதலாகும் வாய்ப்போ..அல்லது நேரடியாக வெளிநாட்டில்வேலை கிடைத்து போவது என்று நடக்கும்.அவர்களும் ஒரு வருடத்திற்க்குள் நன்கு செட்டிலாகி குடும்பம் நல்ல நிலைக்கு திரும்பும்போது கல்யாணம் முடிந்துவிடும்.நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளத்தோடு அல்லாமல் குடும்பத்தோடு இருப்பதற்க்கான விசா சலுகை,மருத்துவ சலுகை,இன்னும் அதிக பச்சம் போனால் வீடு,குழந்தைகள் படிப்பு என சலுகைகள் வெளிநாட்டில் இருக்க அவர்கள் அங்கே குடும்பத்தோடு அழுத்தமாக தங்கி விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.பெற்றொர்களும் தங்கும் படி இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் தங்குவது என்பது அவர்களை கஷ்ட்டத்திற்க்குள்ளாக்கி விடுகின்றது.அப்படியும் சிலர் தன் மகனும்,மருமகளும் வேலைக்கு சென்று விடுகிறார்கள் பேரன் பேத்திகளுக்கு துணையாக இருக்கின்றோம் எனவும் தியாகத்தோடு இருந்து விடுகின்றனர்.அதையும் நான் கண்கூடாக பார்க்கின்றேன்.
இவ்வளவு விளக்கமும் ஏன் சொல்கிறேன் என்றால் முதியோர் இல்லத்திற்க்கு செல்பவர்கள் மகனின்,மருமகளின் கொடுமைகள் என சொல்லும் காரணங்கள் ஒரு பக்கம் இருப்பினும் இது போன்ற சூழ்நிலைகளாலும் பலர் தன்னை தானே கவனிக்க முடியாத காரணத்தினால் இப்படி வந்து இருக்கின்றோம்.என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.இப்ப நான் சொன்னது இரண்டாம் நிலை.இதற்க்கு அடுத்தும்  ஒரு நிலை உள்ளது.அது என்ன என்கிறீர்களா...?
மகனை பெற்றவர்களை மகளுக்கு அப்புறம் மருமகள் என்ற உறவு ஆதரிப்பாள் என்பது நமது கலாச்சாரம்.அதே பெண்ணை மட்டும் பெற்றவர்களின் நிலை...? பெண்ணை மட்டுமே பெற்று விட்டு அவர்களை நல்ல படியாக கட்டி கொடுத்த பின்னர் தனிமையில் தள்ளபடுகிறார்களே.... அந்த சூழ்நிலையை என்னவென்று சொல்வது.மகள்,மருமகனோடு சில பெற்றோர்களோ இல்லை தாய் மட்டுமே இருப்பினும் இந்த சமுதாயம் அதை இன்னும் முழுமையாக திருப்தியுடன் பார்க்கின்றதா...? “ பொண்ணை கொடுத்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க கூடாது” என்பதையே ஒரு ஏட்டில் பதித்தவாறு அவரவர் மனதில் பதித்து வைத்துள்ளார்கள்.ஏன் ஒரு சில பெற்றோர்களே   ஊர்,உலகம் என்ன சொல்லும் என்பது போல் நினைத்து கொண்டு கஷ்ட்டமோ,நஷ்ட்டமோ தனிமையிலேயே காலத்தை தள்ளுவார்கள்.மகள்களோ திருமணத்திற்க்கு முன் இருந்த படி திருமணத்திற்க்கு பின் அம்மா வீட்டிற்க்கு வந்து தங்கி பார்த்து கொள்ள முடியாது.அவளுடைய முதல் முக்கியத்துவம் தன் கணவருடைய வீட்டினருக்காக என ஆகிவிடும்.இது என்னவோ காலம்,காலமாக நடந்து வரும் விஷயம்.இதில் யாரும் யாரையும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லை.குழந்தையிலிருந்து பெண் பிள்ளைகளை  நம் பெற்றோர்களே சொல்லி வளர்ப்பது அப்படி.அது நம் ரத்தத்திலேயே ஊறிவிடுகின்றது.எனவே பெண் பிள்ளைகள் விஷெசங்களிலும்,அவ்வபோது நேரம் கிடைக்கும் போது அம்மா,அப்பாவிற்க்கு முடிந்த உதவிகளை செய்து விட்டு வருவதோடு சரி... “இன்னும் இரண்டு நாள் தங்கிட்டு போயேம்மா...” என்று பெற்றோர்கள் சொன்னாலும், “இல்லைமா பிள்ளைங்க ஸ்கூல் இருக்கு,மாமியார் தனியாக இருப்பாங்க வேலைகளெல்லாம் இருக்குமா..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவோம்.அப்போது பெற்றோர்களுக்கும்,மகளுக்கும் இடையே ஏற்படும் மனநிலை எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்... அதிக அளவில் பாசங்கள் மகனாக இருந்தாலும்,மகளாக இருந்தாலும் சரி பெற்றோர்களிடையே வைத்திருப்பினும் சந்தர்ப்பங்களாலும்,சூழ்நிலைகளாலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை இன்று அதிகமாக காணப்படுகின்றது.

இந்த அவசர உலகத்தில் எதையுமே வெளிகாட்டி கொள்ளகூட முடியாமல் வாழ்ந்து வருவதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
குடும்ப சூழ்நிலையை கருதி பல ஆண்மகன்கள் சம்பாதிக்க வெளிநாட்டிற்க்கு வந்து உறவுகள்,சில விஷேசக்காலங்கள்,சின்ன சின்ன சந்தோஷங்கள் என எல்லாவற்றையுமே மனதிற்க்குள் பூட்டி இயந்திர வாழ்க்கையாக வாழ்ந்து தியாகம் செய்கிறார்களே அதை நினைத்து வருத்தப்படுவதா?நாம் வாழ்ந்து முடித்து விட்டோம் நம் பிள்ளைகளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று பெற்றோர்கள் தியாகம் செய்து மருமகள்,பேரன்,பேத்திகளை விட்டு தனிமையில் இருக்கின்றார்களே... அதை சொல்வதா...?பெண்ணை கட்டி கொடுத்தாச்சு இனி அவள் நன்றாக வாழ்ந்தால் போதும் கஞ்சியோ...கீரையோ... நம்ம வீட்டிலேயே முடிந்ததை செய்து வாழலாம் புகுந்த வீட்டில் நம்மால் அவளுக்கு சங்கடம் வரக்கூடாது என எண்ணி தனித்து வாழ்பவர்களை சொல்வதா...?
பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் பலருடைய வாழ்க்கையின் நிலை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் தான் உள்ளது.வெளியே பல சந்தோஷங்கள் இருப்பதுபோல் இருந்தாலும்,மனதிற்க்குள் வேதனைகள் யாருக்கும் இல்லாமல் இல்லை. 

இவற்றையெல்லாம் சற்றே நிதானமாக யோசித்து பார்த்தால் எல்லோரும் ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இதை நம்மில் யாரும் மறுக்க கூடுமா...?இதற்க்கு மாற்றம் வராதா...?இல்லை இன்னும் இதையும் தாண்டி காலம் செல்லுமா...? எல்லாவற்றிற்க்கும் இறைவன் போதுமானவன்.













வெஜிடபுள் முர்தபா


*** தேவையான பொருட்கள் ***

 *** மாவு பிசைந்து கொள்ள ***
மைதா மாவு                     _         அரை கிலோ
எண்ணெய்                        _          இரண்டு மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா              _          அரை ஸ்பூன்
பால்                                    _           அரை டம்ளர்
சீனி                                     _          2 தேக்கரண்டி
 நெய்                                   _          சிறிதளவு
உப்பு                                    _          தேவையான அளவு

*** ஸ்டஃப்பிங்கிற்க்கு ***
வெங்காயம்                      _         நான்கு
கேரட்                                  _         சிறியதாக ஒன்று 
முட்டைகோஸ்               _         100
உருளைகிழங்கு              _         சிறியதாக ஒன்று
சிகப்பு,ஆரஞ்சு,பச்சை
குடைமிளகாய்           }     _       எல்லாம் சேர்ந்து ஒரு கப்
இஞ்சி,பூண்டு விழுது      _      ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                  _      2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                     _      1 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள்             _      ஒரு தேக்கரண்டி 
முட்டை                                _      மூன்று (விருப்பப்பட்டால்)
மல்லிதழை                         _       சிறிதளவு
எண்ணெய்                            _         சுடுவதற்க்கு 

*** செய்முறை ***

மாவில் சீனி ,உப்பு,பேக்கிங் சோடா எல்லாம் நன்கு கலந்து விட்டு
அதன் பின் எண்ணெயை சூடு செய்து அதையும் மாவில் ஊற்றி  நன்கு பிசறி விடவும்.பாலை விட்டு எல்லா இடத்திலும் படும் படி பிசறி விட்டு பிறகு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கைய்யில் மாவு ஒட்டாதவரை பிசைந்து ஈரத்துணியை கொண்டு மூடி பத்து நிமிடம் விடவும்.

அதற்க்குள் காய்களையெல்லாம் நன்கு கழுவி விட்டு பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்.

மாவினை எடுத்து இன்னொரு முறை பிசைந்து விட்டு திட்டமாக சிறிய உருண்டைகளாக போட்டு ஒவ்வொரு உருண்டையிலும் முழுக்க நெய்யை தடவி வைத்து ஈரத்துணியை கொண்டு  இரண்டு மணிநேரம் விடவும்.(அவசரத்திற்க்கு ஒரு மணிநேரத்திற்க்கு பின்னரும் செய்யலாம்)

ஒரு வானலியை அடுப்பில் வைத்து 7 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும் அரிந்து வைத்திருக்கும் அனைத்து காய்களையும் சேர்த்து அரை ஸ்பூன் போட்டு வதக்கவும்.

நன்கு ஈரப்பதம் இன்றி வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு தூள் வகைகளை சேர்த்து நன்கு மூன்று நிமிடம் வதக்கவும்.
பிறகு விரும்பினால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு மீண்டும் கிளறினால் உதிரியாக இருக்கும்.
அதன் பின் மல்லி தழையை பொடியாக அரிந்து தூவி கிளறிவிட்டு இறக்கி ஆறவிடவும்.

2 முட்டையை ஒரு சிறிய பாத்திரத்தில் உடைத்து ஊற்றி சிறிது மிளகுத்தூள்,உப்பும் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

இரண்டு மணிநேரம் கழித்தபின்,சப்பாத்தி இடும் கட்டையில் எண்ணெயை தடவி விட்டு ஒரு உருண்டையை வைத்து எண்ணெயை லேசாக மேலே தடவி விட்டு ஒரே சீராக பரவலாக வார்க்கவும்.அதன் நடுவே ஒன்றைரை மேசைக்கரண்டி அளவு உள்ளடம் மசாலாவை பரவலாக வைத்து நான்கு பக்கமும் படிக்கவும்.இடைவெளியே இருக்காதவாறு பார்த்துக் கொள்ளவும்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மடித்து வைத்திருக்கு மாவு கலவையின் மேல் லேசாக அடித்து வைத்திருக்கும் முட்டையை தடவி விட்டு அதை மெதுவாக எடுத்து முட்டை தடவிய பக்கத்தை தோசைதவாவில் படுமாறு போடவும்.மறுபக்கத்திலும் அதே போல் முட்டையை எல்லா இடத்திலும் தடவவும்.
மிதமான தீயிலேயெ வைத்து அடி சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.
இதே போல் எல்லாவற்றையும் செய்யவும்.
சூடாகவும் சரி ஆறினாலும் சரி சாப்பிட சுவையாக இருக்கும்.


*** குறிப்பு ***
ப்யூர் வெஜ் சாப்பிடுபவர்கள் முட்டையை தவிர்த்து செய்தாலும் மிகவும் நன்றாகவே இருக்கும்.
நான் வெஜ் பிரியர்கள் காய்களின் அளவை குறைத்து விட்டு கொத்து கறி அல்லது கோழிகளை சேர்த்து செய்யலாம்.அதிக சுவையுடன் இருக்கும்.




Tuesday, February 22, 2011

வட்டிலாப்பம்

 
இது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் வீட்டிலும் அடிக்கடி செய்ய 

கூடிய இனிப்பு ஆகும்.செய்முறைகள் வீட்டுக்கு வீடு சிறிதே 

வித்தியாச படலாம்.

*** தேவையான பொருட்கள் ***

தேங்காய் பால்         _   (திக்கானது) அரை டம்ளர்
முட்டை                _   மூன்று
பாதாம்                  _  12
முந்திரி                  _  7
ஏலக்காய்                _   3
சீனி                      _   முக்கால் கப்
உப்பு                      _   மூன்று சிட்டிகை
நெய்                       _   ஒரு தேக்கரண்டி
*** செய்முறை ***

பாதமை ஊறவைத்து தோல் நீக்கி விட்டு முந்திரி மற்றும் ஏலக்காயின் கறுப்பு விதையையும் சேர்த்து மிக்ஸியில் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு திட்டமான பாத்திரத்தை எடுத்து கொண்டு அரைத்ததையும்,தேங்காய் பாலையும் அதில் ஊற்றி விட்டு அதே மிக்ஸியில் முட்டையையும் நன்கு அடித்து வடிக்கட்டி சேர்க்கவும்.
தேங்காய் பால்,அரைத்த விழுது,முட்டை இவைகளுடன் சீனி,உப்பையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு நெய்யை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து வேகும் அளவிற்க்கு தண்ணீரை ஊற்றி நன்கு சூடு வந்ததும்,இந்த பாத்திரத்தை வைத்து மூடி நன்கு வேக விடவும்.

மிதமான தீயிலேயெ அரை மணிநேரம் வைத்து பின் மூடியை திறந்து கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும்.அப்போது அடுப்பை அணைத்து விடவும்.( ரைஸ் குக்கரிலும் வேக வைக்கலாம்.)

கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக்கி எடுத்து தட்டில் வைத்து விரும்பினால் வறுத்த முந்திரிகளுடன் பரிமாறலாம்.
இதில் பாதாமிற்க்கு பதில் கசகசாவை சேர்த்தும் அரைத்து செய்யலாம்.நன்றாக இருக்கும்.

நண்டு குருமா



*** தேவையான பொருட்கள் ***
நண்டு            _   2 கிலோ
வெங்காயம்       _   இரண்டு
தக்காளி            _   பெரியதாக ஒன்று
பச்சைமிளகாய்     _   இரண்டு
தேங்காய் பால்     _   2 டம்ளர்
இஞ்சி,பூண்டு விழுது_   1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்      _   2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள்    _   ½ தேக்கரண்டி
எண்ணெய்          _   100 மிலி
மல்லிதழை         _  சிறிதளவு
கறிவேப்பிலை       _  ஒரு கொத்து
*** அரைத்து கொள்ள ***
தேங்காய் துருவல்    _  ஒரு கப்
முந்திரி               _  6
பாதாம்                _  6
பூண்டு                 _  5 பல்    
மஞ்சள்த்தூள்           _   2 தேக்கரண்டி
மிளகுத்தூள்            _   1 தேக்கரண்டி
மல்லித்தூள்            _   3 தேக்கரண்டி
சீரகத்தூள்              _   2 தேக்கரண்ட
சோம்புத்தூள்            _    1 தேக்கரண்டி

*** செய்முறை ***

நண்டின் கழிவுகளை அகற்றிவிட்டு தண்ணீரில் அதிக நேரம் வைத்திருக்காமல் நன்கு கழுவி தண்ணிரை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
பாதாமை தோலுரித்து அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் சேர்த்து  நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.பின்பு அதை ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கரைத்து விட்டு மல்லிதழையை அரிந்து சேர்த்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து (நண்டை பிரட்டிகொதிக்க விட தாராளமாக இருக்க வேண்டும்.)எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.எல்லாம் நன்கு வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியபின்,கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி நண்டையும் தண்ணீர் இல்லாமல் ஒவ்வொன்றாக எடுத்து அதில் போட்டு கொதிக்க விடவும்.(மூட வேண்டாம்)
இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே இருபது நிமிடம் வைத்திருந்தால் நல்ல மணத்துடன் எண்ணெய் விட ஆரம்பிக்கும்.
பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கவும்.


சுவையான ,ரிச்சான நண்டு குருமா தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் படி இருக்கும்.
இந்த குருமாவை இடியாப்பம்,இட்லி,தோசை இவைகளுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

நல்ல முருங்கக்காயை நண்டு போடும்போதே சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்தால் இன்னும் வாசமாக இருக்கும்.    





Monday, February 21, 2011

ஈஸி கொத்து பரோட்டா




*** தேவையான பொருட்கள் ***

பரோட்டா                _        இரண்டு
முட்டை                    _        ஒன்று
கோழி (அல்லது) கறி_  ஒரு துண்டு (எலும்பில்லாதது)
வெங்காயம்            _    பெரியதாக  இரண்டு
கேரட்                            _        இரண்டு இன்ச் அளவு
இஞ்சி பூண்டு அரவை _ 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்            _    1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                _    1/2 தேக்கரண்டி
எண்ணெய்                    _    3 தேக்கரண்டி
மல்லி,புதினா தழை _  சிறிதளவு
கறிவேப்பிலை            _  ஒரு கொத்து
உப்பு                                    _     தேவைக்கேற்ப

*** செய்முறை ***


பரோட்டாவை மிக்ஸியில் விட்டு விட்டு இரண்டு மூன்று முறை ஓட விட்டு கொத்தி கொள்ளவும்.

வெங்காயம்,கேரட்,கோழி துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு அகன்ற வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கோழிதுண்டுகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு வெங்காயம்,கேரட்டை போட்டு அதற்க்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு அரவை சேர்த்து கிளறி விட்டு பிறகு தூள் வகைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதன் பின் முட்டையை உடைத்து ஊற்றி எல்லாவற்றுடனும் ஒன்று சேர கிளறி விடவும்.
சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு மீண்டும் கிளறினால் முட்டையெல்லாம் வெந்து மசாலாக்கள் உதிரியாக வரும்.
பின் கொத்தி வைத்திருக்கும் பரோட்டாவை சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி விடவும்.

நன்கு சேர்ந்து சூடும் ஏறியதும் பொடியாக அரிந்த மல்லி,புதினா,கறிவேப்பிலைகளை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வைத்து விட்டு கிளறி இறக்கவும்.

எளிதான முறையில் சுவையானதொரு டிபன் தயார்.

இதை அலுவலகத்திற்க்கும் சரி,ஸ்கூலுக்கும் சரி கொண்டு செல்வதற்க்கு ஏதுவானதாக இருக்கும்.
நல்ல பசி அடக்கமான ஒரு டிபன் இது.
முதல் நாள் இரவு செய்த பரோட்டாவை வைத்தே மறு நாள் காலையில் மிக குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.
சைவ பிரியர்கள் இதில் கோழி போடுவதை தவிர்த்து கேப்சிகம் வேண்டுமானால் சேர்த்து செய்யலாம்.
சுவை அமோகமாக இருக்கும்.சத்தானதும் கூட....

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out