Saturday, March 5, 2011

வாழைக்காய் வறுவல்


தேவையான பொருட்கள்

வாழைக்காய்                         _        இரண்டு
மிளகாய்த்தூள்                      _        ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                        _           கால் தேக்கரண்டி
சோம்புத்தூள்                         _          அரைத்தேக்கரண்டி
உப்பு                                          _           தேவையான அளவு
எண்ணெய்                               _          நான்கு தேக்கரண்டி
கறிவேப்பிலை                       _         ஒரு கொத்து

*** செய்முறை ***
வாழைக்காயை தோல் நீக்கி விட்டு கழுவி கொஞ்சம் தடிமனாக வட்ட வடிவில் அரிந்து வைத்து கொள்ளவும்.

ஒரு அகல வானலியில் அதை வேக வைக்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து உப்பு சிறிதும் சேர்த்து வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும்,வடித்து விட்டு ஒரு தட்டில் தூள் வகைகள்,உப்பும் (வேக வைக்கும் போதும் உப்பு சேர்த்திருப்பதால் பார்த்து சிறிதளவு சேர்க்கவும்)சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி இந்த வாழைக்காயை அதில் சேர்த்து பிரட்டி ஐந்து நிமிடம் வைக்கவும்.

பிறகு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கறிவேப்பிலை போட்டு இந்த பிரட்டிய வாழைக்காயை பரவலாக வைத்து இரண்டு பக்கமும் நன்கு வறுபடும்படி செய்து எடுத்து விடவும்.

தயிர்,ரசம்,சாம்பார் சாதத்திற்க்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.இதை வறுக்கும் போது கறுப்பு உளுந்து குருணையை தூவி வாழைக்காயின் எல்லா இடமும் படும்படி பிரட்டி வறுத்து எடுத்தால் மிகவும் வித்தியாசமான டேஸ்ட்டாக இருக்கும்.ஊரில் கருப்பு உளுந்து குருணை என்றே வைத்திருப்பார்கள்.இங்கு நான் வைத்திருக்கவில்லை.எனவே இந்த செய்முறையில் அது இல்லை.
இது நமது ஊர்களில் கிடைக்கும் மொந்தன் வாழைக்காயில் செய்தால் தான் மிகவும் நன்றாக இருக்கும்.வெளிநாடுகளில் கிடைக்கும் நேந்திர காய் போன்றவைகளில் செய்தால் நன்றாக வராது.சவுக் சவுக்கென்று இருக்கும்.




Friday, March 4, 2011

கொலஸ்ட்ரால் பற்றி அறிவோமா...




கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
எது நல்ல கொலஸ்ட்ரால்?

 

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)



கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.


Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்

LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

Triglycerides <130 mgm%
முக்கிளிசரைடுகள்

HDLP Cholesterol <50 mgm %
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்


மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.



கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.


ஒமேகா 3 உள்ள உணவுகள்


மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

ஒமேகா 6 உள்ள உணவுகள்

சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.





எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?


நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.





கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:


· சீரான உடற்பயிற்சி

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

· மது அருந்துவதைத் தவிர்ப்பது

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

· யோகாசன பயிற்சி செய்வது,

· தியானப் பயிற்சி செய்வது .




இதுவரை நீங்கள் படித்தது எனக்கு தோழி மூலமாக மெயிலில் வந்தது.அதையும் தவிர்த்து இன்னொரு விஷயங்களை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
முடிந்த அளவிற்க்கு டென்ஷனை தவிர்த்து கொள்வது நல்லது.இன்றையை சூழலில்,அதுவும் ஐ.டி துறையில் உள்ளவர்களுக்கு இது கஷ்ட்டமான விஷயம்தான்.ஆனால் அது மனிதனின் உடலில் பல கோளாறுகளையல்லாவா ஏற்படுத்துகின்றது.முடிந்த வரை குறைத்து கொள்ளவேண்டும்.
மனதை அமைதிபடுத்ததான் ஆசனங்கள்,தியானம் என்ற முறையை கைய்யாள மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
சிலர் என்னதான் கட்டுபாடும்,உடற்பயிற்ச்சியும் மேற்கொண்டாலும்,ஜெனிடிக்(குடும்ப வாகு)மூலம் அது இருந்து கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.அப்படி போன்றவர்கள் ஒமேகா _ 3 வகை மாத்திரையை உபயோகபடுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு விஷயமும் ஆதாரம் இல்லாமலோ,அனுபவம் இல்லாமலோ சொல்லவில்லை.எனது கணவருக்கும் இந்த பிரச்சனை உண்டு.தொடர்ந்து மருந்து உபயோகப்படுத்தியும் உடற்பயிற்ச்சி மேற்கொண்டும் முற்றிலும் குறைந்த பாடில்லை.அது எனது மாமனாருக்கு இருந்ததால் இவருக்கும் இருந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள்.தகுந்த 
ஆலோசனைபடியே இந்த ஒமேகா- 3 மருந்தை கடந்த சில மாதங்களாக உபயோகித்து வருகின்றார்.அதனால் தான் இந்த பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இறைவன் எல்லோருக்கும் நோய் நொடியற்ற வாழ்வை தருவானாக....

Thursday, March 3, 2011

உறவை புரிய ஒரு யுகம் வேண்டும்



அது காலை நேரம் 9 மணி .
 கணவருக்கான உணவை தயார்நிலையில் வைப்பதில் மும்முரமான வேலையில் இருந்து கொண்டிருந்தாள் கமலா.வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது.கணவரோ,மகனோ கவனித்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தாள்.மறுபடியும் இருமுறை மீண்டும் அழைப்பு மணி ஓசை ஒலிக்கவே…. “இங்கே வாசலில் யார் வந்திருக்காங்கன்னு கொஞ்சம் அப்பாவும்,பிள்ளையும் பார்க்கக் கூடாதா…நான் அடுக்களையில் வேலையாகதானே இருக்கின்றேன்.யார் வீட்டிலேயோ சத்தம் வர்ற மாதிரிதான் இருப்பீங்க…”என புலம்பிக் கொண்டே வாசலை நோக்கி சென்றாள்.கைய்யில் அட்ரஸை தேடியவாறு இருக்கும்  நிறைய கடித கவர்களை ஏந்திக் கொண்டு தபால் காரர் காத்துக் கொண்டிருந்தார்.
கமலாவின் தலை தெரிந்ததும் “அம்மா ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குமா…இந்த பேப்பரில் கைய்யெழுத்து போட்டு கொண்டு கவரை வாங்கி கொள்ளுங்கள்.” என்றான்.

 “யார் பேர்ல பா வந்திருக்கு”என்றாள் கமலா. “நிதிஷ்குமார் உங்க பையன் தானே….?அவர் பேர்ல தான்மா வந்திருக்கு.”என்றான்.
“டேய்….நிதிஷ் உனக்குதாண்டா ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கு கைய்யெழுத்து போடனுமாம். வந்து வாங்கிக்க என்ன…”என்று கூறி விட்டு அடுக்களைக்குள் மறுபடியும் அவள் ஐக்கியமானாள்.

கைய்யெழுத்து போட்டு விட்டு தபாலை கைய்யில் வாங்கி பார்த்த நிதிஷ் முக மலர்ச்சியுடன் அம்மாவை நோக்கி சென்றான்.உரத்த குரலில் “அம்மா….இது என்ன தெரியுமா..?என் தலையெழுத்தையே மாற்றக் கூடிய கருவிமா” …..என்றவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
“ புரியவில்லையா அம்மா…? போன வாரம் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் இண்டர்வியூ முடிச்சுட்டு வந்தேன் தெரியுமா?அங்கிருந்துதான் இந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு. இன்னும் இரண்டு நாளில் வந்து வேலையில் சேரும்படி சொல்லி இருக்காங்கம்மா.என்னமோ அப்பா அன்னைக்கு சவால் எல்லாம் விட்டாரே.உன்னால ஒருவேளை சாப்பாடு போட முடியுமா…?உன்னை கட்டிக்கிட்டு வர்றவளுக்கு ஒரு முழம் பூ வாங்க முடியுமான்னு? ஆச்சு,பூச்சுன்னு சத்தம் போட்டாரே.இப்ப பார்த்தியாம்மா மாசம் பொறந்தா அய்யாவுக்கு முப்பதாயிரம் சம்பளம் கைய்யில் வந்திடும்.அவரு என்னைக்காவது இந்த லெவலுக்கு வந்திருக்காரா….?
உன் புருஷனிடம் கொடுத்த சவால்ல ஜெயிச்சுட்டேன்மா” என்று அவன் அப்பா இருக்கும் இடத்தை ஓரக்கண்ணில் பார்த்தவாறு சொல்லிக் கொண்டிருந்தான்.இதை கேட்ட கமலாவிற்க்கு மகனுக்கு வேலை கிடைத்து விட்டதே என்று சந்தோஷப்படுவதா…..இல்லை அப்பாவும் ,பிள்ளையும் எலியும் பூனையுமாக இருக்கின்றார்களே என்று நினைத்து வருத்தப்படுவதா என்று புரியவில்லை.இருப்பினும்,மகனின் தலையை கோதியவாறு “ ரொம்ப சந்தோஷமாக இருக்கு நிதிஷ்.உனக்கு என்னடா குறைச்சல் நீ நல்லா வருவேடா”என்று சொன்னாள்.

காதில் வாங்கியும் வாங்காததுபோல் அலுவலகத்திற்க்கு தயார் நிலையில் வந்த ராஜாராமன் “கமலா நேரம் ஆச்சு அங்கே என்ன செய்துகிட்டு இருக்க? டிபன் ரெடியா?நான் சாப்பிட்டு சீக்கிரம் போகணும்”என்று குரல் கொடுத்தார். “இதோ வந்துட்டேங்க”…. என்று குரல் கொடுத்தவாறு டிபனையும் சாப்பிட மேசையில் வைத்து விட்டு மதியத்திற்க்கான சாப்பாடை பைய்யில் வைத்து கொடுத்தாள்.டிபனை முடித்துவிட்டு “நான் போய் வருகிறேன் கமலா”என்று சொல்லி விட்டு TVS 50 யில் வெளியேறினார்.

அவர் தலை மறந்ததும் “ஏண்டா நிதிஷ் அப்பாவிடம் வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல கூடாதா?எவ்வளவு சந்தோஷம் படுவாரு தெரியுமா…. .அவர் உன்னை பெத்தவர்டா  அவர்ட்ட ஈகோ பார்க்கலாமா…?என்று கமலா சொல்லவும்,,,, தாமதிக்காமல் “நீ சும்மா இருமா நான் வேகமாதானே உன்னிடம் சொல்லி கொண்டிருந்தேன்.அது காதுல விழாமலா இருந்திருக்கும்.ஒரு வார்த்தை இதை பத்தி என்னிடம் வேண்டாம்……உன்னிடாமாவது கேட்டு இருக்கலாம்தானே. அதுவும் அன்னைக்கு அப்பா என்ன சொன்னார்?நாலு பேரோட ஊர் சுத்திக்கிட்டு இருப்பதால் என்ன பயன்னு கேட்டாரே….அதுல ஒருத்தனால கிடச்சதுதான் இந்த சூப்பரான வேலை.அதெல்லாம் அவருக்கு எங்கே தெரிய போகின்றது.”என்றான்.

கமலா நிறைய மனதை விட்டு மகனிடம் பல விளக்கங்களும்,விஷயங்களும் சொல்ல வாய் வந்தாலும் அதை காது கொடுத்து கேட்க்கும் மனநிலையில் மகன் இல்லை என்பதை அறிவாள்.அதுவும் இன்றி, கணவரின் சொல்லிற்க்கு கட்டுப்பட்டவாரு அவற்றை அடக்கி கொண்டு, “சரி நிதிஷ் போனது போகட்டும்.இனி சென்னையில் போய் நல்ல விதமாய் வேலை பார்க்க போகிறாய். இரவு அவர் வந்ததும் கோபமா இல்லாம சாந்தமா அப்பாவிடம் இந்த வேலை மற்றும் விபரம் எல்லாம் சொல்லணும் என்ன சரியா?”என்று கமலா கேட்டு கொண்டாள். “ப்ச்ச்….சரிம்மா சொல்லுகிறேன் போதுமா….?பசிக்குது டிபன் எடுத்து   வை” என்று நண்பர்களிடம் விஷயத்தை சொல்ல செல்ஃபோனை தட்டியவாறு நாற்காலியில் உட்கார்ந்தான்.

அலுவலகம் போகும் வழியில் இருக்கும் சின்ன பூங்கா வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தன் சட்டை பைய்யில் இருக்கும் செல்ஃபோனை எடுத்து நம்பரை அழுத்தி காதில் வைத்து காத்து கொண்டிருந்தார்.மணி அடித்து ஃபோனும் எடுக்கப்பட்டது.
 “ஹலோ…நான் தான் ராஜாராமன் பேசுகிறேன்…செந்தில்நாதன்தானே பேசுறது..”  “.டேய் ராஜாராமா எப்படி இருக்கே டா…?உன் அழைப்புக்காகதான் காத்துக் கொண்டிருந்தேன்.என்ன உன் மகனுக்கு லட்டர் வந்ததா உனக்கு இப்ப சந்தோஷம்தானே…?” “ம்…ரொம்ப சந்தோஷம் செந்தில் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல…சந்தோஷத்துல பேச்சே வர மாட்டேங்குது.பொண்ணை நல்லபடியாக கட்டி கொடுத்தேன்.பையன் பொறுப்பே இல்லாம இருக்கானே அவன் எதிர்காலம் என்னாகுமோன்னு கவலைபடாத நாளேயில்லை….இப்ப நீ செய்து இருக்கின்ற உதவிக்கு…..”என்று சொல்லும் போதே கண் கலங்கி கொண்டு நின்றது.வார்த்தைகள் வர மறுத்தன. 

“என்ன ராஜாராமா இப்படி சொல்லுற உன்னை விடவா நான் செய்துட்டேன்.நாம படிக்கும் காலத்தில் நம் வகுப்பில் முதலாம் இடத்தில் இருக்கும் உனக்கு மேற்படிப்புக்காக கிடைத்த அரசாங்க வாய்ப்பினை எனக்காக என் குடும்ப சூழ்நிலை கருதி விட்டு கொடுத்தியே அதற்க்கு இது ஒன்றுமே இல்லையடா…..அன்று நீ செய்ததுதான் இந்த அளவிற்க்கு ஒரு கம்பெனியின் தலைமை அதிகாரியாக இருக்க முடிகின்றது.ஆனால் நீயோ இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்டாக கஷ்ட்டபட்டு கொண்டு இருக்கின்றாய்.அது எனக்கு இன்று வரை உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது.நல்ல வேளையாக என்றும் இல்லாமல் யாரிடமும் உனக்காக உதவி கேட்காத நீ உன் மகனுக்காக கேட்க்கும் போது அதை நான் எப்படி மறுப்பேன்.அதுவும் நல்ல படிப்பையும் உன் மகனுக்கு கொடுத்திருக்கின்றாய்.அதுவும் நீ சொன்ன படி  உன் பையனின் நண்பனின் மூலமாக வேலை கிடைக்கணும்னு கேட்டு கொண்டதால்,நீ கொடுத்த மெயில் முகவரியிலேயே வேலை தேடுதலுக்கான இணையத்தளத்தின் வாயிலாக அவனுக்கு இண்டர்வியூ கார்டை அனுப்பினேன். அதற்க்கேற்றார் போல் தான் வேலையும் கொடுத்துள்ளேன்.அதற்க்கான திறமையும்,வேகமும் உன் பையனிடம் நிறையவே இருக்கின்றது.உனக்கு என்னால இப்படி ஏதும் செய்யும் வாய்ப்பு கிடத்ததேன்னு அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன்.இனி கவலை படாமல் இரு ராஜாராமா….என்ன நீ செய்த தியாகத்தை பற்றி உன் மகனிடம் பெருமையாக சொல்ல முடியவில்லை.
 இப்போதைக்கு சொல்லாதேன்னு சொல்லிட்ட. இனி உன் மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலை படாதே..…?நேரம் கிடைக்கும் போது சென்னைக்கு வந்து வி்ட்டு போ என்ன….”என்று செந்தில் சொல்ல மறுபடியும் தன் நன்றியை ஒருமுறை தெரிவித்து  விட்டு தொலை தொடர்பை துண்டித்துவிட்டு, “வீட்டிற்க்கு செல்லும்  போது ஏதும் இனிப்பு வாங்கி செல்ல வேண்டும்.கமலாவிற்க்கு இப்போதாவது நாம் நடந்து கொண்டதற்க்கு அர்த்தம் புரிந்திருக்கும்.அது போதும் என்று நினைத்துக் கொண்டே….அலுவலகம் நோக்கி ராஜாராமன் சென்றார் சந்தோஷத்தோடு.

Wednesday, March 2, 2011

கிச்சடி சாதம்


தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி                         _    ஒரு டம்ளர்
தேங்காய் பால்                          _     அரை டம்ளர்  
வெங்காயம்                                _     ஒன்று
தக்காளி                                        _     பாதியளவு
பச்சை மிளகாய்                          _     ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது                _     ஒன்றரை தேக்கரண்டி
 மஞ்சள்த்தூள்                              _     ஒரு தேக்கரண்டி
 கரம் மசாலாத்தூள்                     _    ஒன்றரை தேக்கரண்டி
 புதினா இலை                               _    சிறிதளவு
 எண்ணெய்                                     _    6 தேக்கரண்டி   
பட்டை                                             _     2 இன்ச் அளவு

*** செய்முறை ***

வெங்காயம் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை இரண்டு மூன்று முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு பிறகு அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு தூள் வகைகளையும்,புதினா தழைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு தேங்காய் பாலோடு ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து ஊற்றவும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிசியை தண்ணீர் இன்றி வடித்து சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,நன்கு கிளறி விட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
ஸ்டீம் நின்றதும் குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டு மூடி வைக்கலாம்.அடிவரை நன்றாக பொல பொலவென்று மணமாக இருக்கும்.

இது குழந்தைகளுக்கும்,சரி கணவர்களுக்கும் சரி பாக்ஸிற்க்கு வைத்து கொடுத்தனுப்ப மிகவும் எளியதாக இருக்கும்.விரும்பியும் சாப்பிடுவார்கள்.

இதிலேயே பீஸ் சேர்த்தும் செய்யலாம்.சிக்கன் ஃப்ரை நல்ல காம்பினேஷனாக இருக்கும்.இந்த காம்பினேஷனோடு உள்ள எனது குறிப்பை பார்வையிட இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம்.






Tuesday, March 1, 2011

மட்டன் தால்ச்சா


*** தேவையான பொருட்கள் ***
மட்டன்                             _  எலும்புடன் கூடியது கால் கிலோ  
துவரம்பருப்பு                 _   அரை கப் 
கடலைபருப்பு                _   இரண்டு தேக்கரண்டி
வெங்காயம்                    _   பெரியதாக ஒன்று
தக்காளி                            _   இரண்டு
பச்சை மிளகாய்              _  இரண்டு
கத்திரிக்காய்                    _  இரண்டு
உருளைகிழங்கு              _  ஒன்று
கேரட்                                  _   இரண்டு இன்ச் அளவு
சுரைக்காய்(விரும்பினால்) _  நான்கைந்து துண்டுகள்
வாழைக்காய்                         _   சிறியதாக ஒன்று
மாங்காய்                                 _   மூன்று துண்டுகள்(விருப்பத்திற்க்கேற்ப)
புளி                                            _   சிறிய எலுமிச்சை அளவு 
இஞ்சி,பூண்டு விழுது          _    இரண்டு தேக்கரண்டி
எண்ணெய்                              _    100மிலி
பட்டை                                     _    2 இன்ச் அளவு துண்டு
ஏலக்காய்                               _   ஒன்று
மஞ்சள்த்தூள்                        _    ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                      _    ஒன்றரை தேக்கரண்டி
மல்லித்தூள்                           _    இரண்டு தேக்கரண்டி
மல்லி,புதினா தழை             _    சிறிதளவு
கறிவேப்பிலை                      _    நான்கு கொத்து

*** செய்முறை ***
வெங்காயம் தக்காளிகளை பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்.
மட்டன் எலும்புகளை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை ஏலக்காய் போட்டு தாளித்து,அரிந்து வைத்திருக்கும் வெங்காயம் போட்டு வதக்கவும்.பொன்னிறமாக வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு தக்காளியும்,கறிவேப்பிலை ஒரு கொத்து இலைகளையும்,மல்லி புதினா தழைகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு மசிய வதங்கியதும்,மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள்களை சேர்த்து நன்கு வதக்கி விட்டு மட்டன் எலும்புகளையும்,ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்கு மிதமான தீயில் மூன்று நிமிடம் வதங்க விடவும்.

பின்பு இரண்டு  டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் குறைந்த தீயில் பன்னிரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.
மற்றொரு சிறிய குக்கரில் பருப்பைகளை நன்கு கழுவி விட்டு வேக வைத்து கொள்ளவும்.

இதற்க்கிடையில் காய்களையும் கழுவி அரிந்து தண்ணீரில் (கருக்காமல் இருக்க)  போட்டு வைத்துக் கொள்ளவும்.
மட்டன் எலும்பு வெந்த குக்கரிலேயே அந்த கலவையுடன் மல்லித்தூள்,மாங்காய் தவிர்த்து அனைத்து காயையும் சேர்த்து,பருப்பினுடைய தண்ணீரை மட்டும் ஊற்றி இன்னும் சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டோ,இல்லை ஐந்து நிமிடம் வைத்தோ இறக்கவும்.

பிறகு குக்கரை திறந்து ஒரு தாராளமான பாத்திரத்தில் ஊற்றி மாங்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு கொதி கொதிக்க விட்டு பிறகு புளியை கரைத்து ஊற்றி ஒரு கொதி கொதித்ததும்,பருப்பையும் கறிவேப்பிலையை கொத்தோடு கழுவி சேர்த்தும் மிதமான தீயிலேயே கொதிக்க விடவும்.அடி பிடித்திடாமல் இருக்காமல் இடையிடேயே கிளறி விட்டு கொள்ளவும்.(புளி அதிகம் விரும்புவோர் இன்னும் சிறிது சேர்த்து கொள்ளலாம்.)

எண்ணெய் மினு மினுக்க ஆரம்பிக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

நல்ல மணமுடன் சுவையான தாள்ச்சா தயார்.

இதையே சிக்கன் துண்டுகளை கொண்டும் செய்யலாம்.அதற்க்கு தாளித்து சிக்கனுடன்,காய்களையும் ஒன்றாகவே சேர்த்து வேக வைக்கலாம்.இதை பாத்திரத்திலேயும் வேக விட்டு செய்யலாம்.

இது பிரியாணி,நெய் சோறு ஏன் சாதா சாதத்திற்க்கு கூட ஊற்றி சாப்பிட நன்றாக இருக்கும்.

இதற்க்கு சுருக்கென்று தொட்டுக் கொள்ள இந்த மட்டன் கடாய் வறுவல் பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும்.இதன் குறிப்பு வேண்டுமேயானால் இங்கு க்ளிக் செய்து பார்க்கவும்.என்னவருக்கு மட்டன் விருப்பம் கிடையாது.இம்முறையில் செய்தால் மட்டுமே என்னவர் விரும்பி மட்டனை சாப்பிடுவார்.என் குழந்தைகளுக்கும் மிகவும் விருப்பமான ஒன்று.













Monday, February 28, 2011

திடீர் விருந்தினரின் வருகை...


நமது கலாச்சாரத்தில் விருந்தோம்பல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.வருபவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு வயிறார சாப்பிட கொடுத்து திருப்திபடுத்த வேண்டும் என்பது காலம்காலமாக பல புராணங்கள் முதற்கொண்டு சொல்ல பட்ட விஷயங்கள்.சின்ன விருந்துகள் முதற்கொண்டு பெரிய பெரிய கல்யாண விருந்துகள் வரை சாப்பாடு என்பது மிக முக்கியம்.அதை எந்த ஒரு குறையும் இன்றி அனைவரையும் திருப்தி படுத்தவே அனைவரும் கவனமாக இருப்பர்.
அதில் சிறு குறை ஏற்பட்டாலுமே அதையும் பிரச்சனையாக பேசுபவர்களும் உண்டு.அந்த அளவிற்க்கு விருந்துக்கென்ற தனி முக்கியத்துவம் நமது மக்களிடையே உண்டு.

அதே போல் தான் சிறிய விருந்துகளுமான நமது வீடுகளில் அவ்வபோது விருந்தினர்களின் வருகையும் ஆகும். வரும் விருந்தினர்கள் முதல் நாளோ... அல்லது அதற்க்கு முன்னதாகவோ வருகையினை தெரிவித்திருந்தார்களேயானால்..., நாம் அதற்க்கு ஏற்றவாறு தயார் நிலையில் சாமான்களை வாங்கி, விதம் விதமாக  சமைத்து ,வீட்டினை முன்னதாகவே சுத்தம் செய்து வைத்து கொண்டு, வந்தவர்களோடு உரையாடி விட்டு, உணவு பரிமாறுதல் என்று மட்டுமே இருப்பது போன்று தயார் நிலையில் இருக்கலாம்.இது வந்தவர்களை சந்தோஷப்படுத்தியதோடு அல்லாமல் ,நம் மனதிற்க்கு முழு திருப்தியை அழிக்கும்.


ஆனால் சொல்லாமல் சிலர் திடீர் வருகையாக வருபவர்களும் உண்டு. “உன்னால் முடிந்ததை,அல்லது ஏற்கனவே  செய்ததை வைம்மா போதும்”என்பார்கள். ஆனால் அப்படி செய்வதற்க்கு நமக்கு மனசும் இடம் கொடுப்பதில்லை.திடீரென்று உணவு வேளையின் நெருக்க கட்டத்தில் வந்தார்களேயானால் வேறு வழியே இல்லை.இருப்பதையே வைத்து விடுவோம்.அதை சாப்பிட்டுவிட்டு சிலர் குறை சொல்பவர்களையும் நான் பார்த்ததுண்டு.... “என்னதான் நாம சொன்னாலும் இப்படியா வந்தவங்களுக்கு சாப்பாடு வைக்கிறது...ஆளை பார்த்ததும் பதறி அடிச்சு சமைக்க வேணாம்... நாமெல்லாம் அந்த காலத்துல மனுசங்கல பார்த்துட்டா...எப்படி துரு துருன்னு இருப்போம்.இப்ப உள்ளதுங்களுக்கெல்லாம் அது எங்கே தெரியுதுன்னு?” ஆரம்பிச்சுடுவாங்க. இது ஊரில் ஆங்காங்கே நடக்கிற விஷயம் தான்.
முன்பெல்லாம் ஃபோன் வசதி அவ்வளவாக இல்லாததால் திடீர் வருகைக்கு ஏதும் நாம் சொல்ல இயலாது.ஆனால் இப்பதான் வீட்டிற்க்கே ஆளுக்கோர் செல் என்ற நிலை வந்துவிட்டதே.... இன்றைக்கும் சிலர் அப்படியே எந்த ஒரு அறிவுப்பும் இல்லாமலே வந்து நிற்ப்பார்கள்.அவசர வேலையில் சில சந்தர்ப்பங்களால் வருவதௌ என்பது பரவாயில்லை.ஆனால் சிலர்  “நேரம் இன்னைக்கு கிடைத்தது.ரொம்ப நாளா நீயும் கூப்பிட்டு கொண்டிருந்ததால் உடனே கிளம்பி வந்துட்டோம்” என வந்தார்களேயானால் தனியே இருப்பவர்களுக்கு என்ன செய்ய முடியும் சொல்லுங்க.. கிளம்பி வாகன பயணத்தில் இருக்கும் போது வருகையினை சொன்னாலே போதும் நாம் ஓரளவிற்க்கு தயாராக இருக்கலாம்.நாம் எல்லாம் நமக்கு வேண்டியதை சமைத்துமுடித்து அப்பாடி வேலை முடிந்து விட்டது என நினைக்கும் போதோ....இல்லை கிடப்பில் கிடக்கும் வேறு வேலைகளை செய்ய முற்படும் போதோ.... திடீரென விருந்தினர்கள் இரண்டு,மூன்று பேர் வந்து நின்றால் நாம் என்ன செய்யமுடியும்?ஒரு சில நிமிடங்கள் ஒன்றுமே புரியாத நிலையில் பட படவென்று நிற்ப்போம்.அப்புறம் மறுபடியும் கோழியை வாங்கு கறியை வாங்கு காயை வாங்குன்னு ஆளை புடிச்சு அங்கே அனுப்பி இங்கே அனுப்பி மறுபடியும் மூன்று நான்கு வகை சமையலோடு விருந்தும் அரங்கேறும்.இதில் வந்தவர்களிடம் உட்கார்ந்து பேச முடியாமல்,வந்தவர்களுக்கும் சங்கடமாக தான் முடியும்.இந்த நிலையை பலர் மாற்றி கொள்வது நல்லது.


வெளிநாட்டில் வாழ்பவர்களேயானாலும் இதையேதான் சொல்லி கொள்ள நினைக்கிறேன்.சாப்பாட்டிற்க்கென்று இல்லை.ஒரு மாலை நேர விசிட்டிங்க் என்று இருந்தாலும் கூட நாம் அன்று காலையிலேயே ஃபோன் செய்து நீங்கள் ஃபிரீயாக இருக்கின்றீர்களா...?உங்களுக்கு முக்கிய வேலை,வெளியில் செல்லும் நிகழ்ச்சி என ஏதும் இல்லையே என அறிந்து கொண்டு பிறகு தான் வர நினைக்கும் செய்தியை தெரிவித்தல் நல்லது.
ஏனென்றால் இந்த வெளிநாட்டில் பலரும் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகின்றனர்.அவர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் தான்(சிலருக்கு இரண்டு நாள்)கிடைக்கும்.அப்போது போக வேண்டிய வாங்க வேண்டிய விஷயங்கள் என இருக்கும்.திடீரென்று வந்து காலிங்பெல்லை அடிக்க யாரும் இல்லாமல் அவ்வளவு தூரம் வந்து திரும்பி செல்வது என்பது வருபவர்களுக்கும் தர்மசங்கடம்தானே....(இது எங்க வீட்டிலேயே பலதடவை நடந்து இருக்குங்க...வாசலில் நிற்க்கிறேன் என்று ஃபோன் வந்து இருக்கு...)  


இது மட்டும் காரணமில்லை.சில நேரங்களில் நம் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கலாம்.அதனால் வேலையை சரி வர செய்ய முடியாமல் குழந்தையை வைத்து கொண்டு போட்டது போட்டபடியே இருப்பது போன்றெல்லாம் சூழ்நிலைகள் ஏற்படும்.இப்படி ஒரு சூழ்நிலையில் ஒருவருடைய வருகை சந்தோஷமான சூழ்நிலையை உண்டாக்குமா....?பலரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.  

அதற்க்காக விருந்தினர் வருவதை தவறு என்று சொன்னதாக யாரும் தயவுசெய்து எண்ண வேண்டாம்.எனக்கு விருந்தினரை அன்போடு வரவேற்று உபசரிக்க மிகவும் பிடிக்கும்.அதையே பதட்டம் இல்லாமல் செய்யும்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் என்னுடைய கருத்து.என் கணவர் திடீர் வருகையால் ரொம்ப டென்ஷனாகி விடுவார்.நான் பெரும்பாலும் அந்த டென்ஷனை வெளியில் காட்டி கொள்ளமாட்டேன்.வேண்டிய சாமான்களை சீக்கிரம் ஆர்டர் செய்து சமைத்து கொடுக்க பார்ப்பேன்.இப்போது எல்லாம் பழகி போச்சுன்னு வச்சிக்குவோம்.புதிதாக சமைக்க ஆரம்பித்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் குடும்பதலைவிகளுக்கு எவ்வளவு பதட்ட நிலையும்,என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க்கும் நிலை கஷ்ட்டமாக இருக்கும்.இது போன்று வருபவர்களிடம் முடிந்தவரை ஃபோன் செய்து விட்டு வீட்டிற்க்கு வரும் பழக்கத்தை அவர்களிடத்தில் சொல்லி புரிய வைக்க வேண்டும்.இல்லையென்றால் விடுமுறை நாட்களில் யாரேனும் திடீர் என்று வந்தார்களேயானாலும் எப்படி நாம் சமாளிப்பது என்று நம்மை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.வேற வழியே இல்லைங்க....

இதற்க்கு அடுத்து அப்படி விருந்தினரை சமாளிப்பதற்க்கான சில டிப்ஸை கொடுக்க இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்...


Sunday, February 27, 2011

*** ஈஸி பாஸ்தா ***



*** தேவையான பொருட்கள் ***

பாஸ்தா(விருப்பமான வடிவில்)   _   ஒரு கப்
வெங்காயம்                                          _    ஒன்று 
தக்காளி வித் சில்லி சாஸ்              _    அரை தேக்கரண்டி 
கேரட்,சிகப்பு குடைமிளகாய்,
முட்டை கோஸ்    அரிந்தது   }        _     தனி தனியே 2 மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது                         _    அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                                     _    அரை தேக்கரண்டி
எண்ணெய்                                              _   4   தேக்கரண்டி 
மல்லி தழை                                          _      சிறிதளவு

*** செய்முறை ***

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
சிறிய குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,வெங்காயம் மற்றும் அரிந்துள்ள அனைத்து காய்களையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு,சாஸ் மற்றும் மிளகாய்த்தூளும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு பாஸ்தாவையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் ஒரு கப் நிறைய தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துவிட்டு மல்லிதழையை அரிந்து தூவி,குக்கரை மூடி,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான உதிரியான பாஸ்தா தயார்.காரம் அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும்.நினைத்தவுடன் சுலபமாக செய்து விடலாம்.



Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out