Monday, April 24, 2017

திருமணம் எனும் நிக்காஹ்….





           சாதிக் வீட்டினுள் நுழையும் போது, குண்டூசி விழுந்தால் கூட அதிக சத்தம் கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது வீடு. ஹாலில் சோபாவில் தான் அத்தாவும்,அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அக்கா சாஜிதா சிறிது தள்ளி அமர்ந்துக் கொண்டு மடியில் தன் மகளை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்….. இத்தனை பேரும் இருந்தும் ஏன் இந்த அமைதி?என்று யோசித்துக் கொண்டே மாடியில் தன் ரூமுக்கு செல்ல முற்ப்பட்டான்.

           “சாதிக் உன்கிட்ட பேசணும் இங்க வந்து உக்காரு…”என்றார் சாதிக்கின் அத்தா வஹாப்.  அப்ப எனக்காக தான் காத்துக் கொண்டிருந்தார்களா?என்னவா இருக்கும்னு யோசித்தபடியே எதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்தான்.

     லேசாக தொண்டையை கணைத்து விட்டு, “ இங்க பாருப்பா சாதிக், நீயும் பயணுத்துலேர்ந்து வந்து ஒரு வாரம் ஆகப்போகுது.உன் அம்மாக்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லி உன்னிடம் சொல்ல சொன்னா இன்னும் தான் சொல்றா….. அதான் நானே உங்கிட்ட நேரிடையாகவே பேசிடலாமேன்னு வெளிய கூட போகாம காத்துக்கிட்டு இருக்கேன்.என் சினேகிதன் நவாஸ் தெரியுமுல்ல அவருக்கு இரண்டு பொண்ணுங்க… மூத்த பொண்ணு இப்பதான் காலேஜ் ல ஏதோ படிச்சுட்டு… ஏம்மா சாஜிதா…… என்ன படிச்சிருக்கு அந்த புள்ளன்னு அவங்க அம்மா சொன்னாங்க?

       பிஸிஏ பண்ணியிருக்காளாம் அத்தா…

      ஆ…. அந்த படிப்புதான் இந்த வருஷத்தோடு முடிக்குதாம். நீ ஊருக்கு வர்ற செய்தி சொன்னதும் நவாஸூம்,அவன் பொண்டாட்டியும் இங்கே வந்து உனக்கு தன் பொண்ணை கட்டிக் கொடுக்க விருப்பப்படுறதா சொல்லிட்டு பொண்ணு ஃபோட்டோவையும் கொடுத்துட்டு, நீ வந்ததும் பேசி ஒரு முடிவு சொல்லுங்கண்ணு சொல்லிட்டு போயிருக்கான்.எங்கங்கயோ பொண்ணு தேடி அலையிறதுக்கு நமக்கு தெரிஞ்ச வீட்டு பொண்ணா இருந்தா நல்லதுதானேன்னு நான் எனக்கு சம்மதம்தான்னு ஃபோன்ல அவன்ட்ட சொல்லிட்டேன்.உங்கம்மா கூட பொண்ணு ஃபோட்டோ பார்த்துட்டு பல்லை இழிச்சா…. ஏம்மா சாஜிதா நீயும் பார்த்தல்ல….

         ம்… பார்த்தேன் அத்தா…

      உன் தம்பிட்டையும் காட்டு மா…. சாதிக் நீ மறுக்க மாட்டேன்னு தெரியும்…. இருந்தாலும் அதை உன் வாயால சொல்லணும்னு உன் அம்மா சொல்றா… என்னப்பா சொல்ற?இன்ஷா அல்லாஹ் ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சிக்கிறா மாதிரி பேசிடலாமா?” என்று சொல்லி முடித்தார் வஹாப்.

    அத்தா அவனிடம் சொல்ல சொல்ல அக்காவையும்,அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சாதிக்.. அத்தா சொல்லி முடித்த உடனேயே… “இல்லை அத்தா இந்த இடம் சரி வராது அத்தா…. என் மனசுல இருக்குறதை ஏற்கனவே அம்மாட்டையும், அக்காக்கிட்டேயும்  சொல்லியிருக்கேன்.”என்று சொன்ன உடனேயே சடக்கென்று வேகமாக எழுந்து நின்று சத்தம் போட்டார் வஹாப்.

      “என்ன சாதிக் நீயும் எல்லார் மாதிரியும் காதல் கத்திரிக்காய்னு கதை அளக்க போறியா..?உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்?பொறுப்புள்ள புள்ள என் புள்ளன்னு ஊர்ல எல்லார்க்கிட்டேயும் சொல்லி பெருமைபட்டுகிட்டுல்ல இருந்தேன்.என் மூஞ்சில கறியை பூசுற மாதிரி இல்லைனு மறுத்து பேச ஆரம்பிச்சுட்டல்ல…..”என்று குரல் உயர்த்தினார்…

      “அத்தா தயவு செய்து நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்கங்க அத்தா…. நீங்க நினைக்கிறதுல எந்த மாற்றமும் வந்துடாது அத்தா…. என்னை நம்புங்க அத்தா….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,கடுகடுத்த முகத்தோட விட்டத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார் சாதிக்கின் அத்தா.

       சாதிக்கின் அம்மா ஜமீலா பயந்தவாறே…,கணவரின் அருகில் போய், ‘ஏங்க… நம்ம புள்ளைய தப்பா நினைக்காதீங்க….. அவன் மனசுல இருக்குறதை முழுசா கேட்டுட்டு அப்புறம் கோபப்படுறதா.. என்னன்னு பாருங்க….” என்று சொன்னதும்,திரும்பி அவர் ஒரு பார்வை பார்க்க பயந்தவளாய் பின்னே நகர்ந்தாள்….

      சாதிக்கின் அக்கா போடா போய் அத்தாவிடம் பேசு என சைகையில் காட்ட,சாதிக் எழுந்து அத்தா அருகில் நின்று பேச தொடங்கினான்.

       “அத்தா… வல்லாஹி நான் யாரையும் காதலிக்கலாம் இல்லை அத்தா…. ஆனால் ரொம்ப நாளா ஒரு விஷயம் என் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு.உங்க அக்கா,அதான் என் மாமி  நாலு வருஷத்துக்கு முன்னாடி அக்காவை தன் பைய்யனுக்கு கொடுக்குறீங்களான்னு கேட்டாங்க.ஆனால் நீங்களும்,அம்மாவும் மாமி வீட்டில் அவ்வளவு வசதியில்லை, பையனும் படிக்கலை நம்ம பொண்ணு அங்கே கஷ்ட்டபடுவாளேன்னு யோசித்து வெளியில பொண்ணை பார்த்துக்க.. சரிவராது அப்படின்னு மாமிக்கிட்ட சொல்லிட்டீங்க. அத்தா… நீங்க யோசித்ததிலும் தப்பில்லை.பொண்ணு வளரும் போதே நல்லவிதமா வசதியா வளர்ந்துட்டு,கட்டிக்கொடுக்குற இடத்துல நம்ம வீட்டில் இருக்கும் பாதி வசதிக்கூட இல்லாத நிலையில் பொண்ணை வாழ வைத்தால் நாளை நம்ம பொண்ணு கண்ணகசக்கிட்டு நிப்பாளோன்னு நீங்க பயப்படுறது பெற்றோர்களுக்கே உரிய ஒரு நியாயமான கவலைக்கொண்ட எண்ணம்தான்.ஏன்னா…. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா அவள் வாழ்நாளில் தொண்ணூறு சதவீதம் அந்த வீட்டோடேயே ஐக்கியமாயிடுறா..அதனால அது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.…

      ஆனால் அதே வசதியில்லாத வீட்டில் உள்ள பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து தான் வாழ்வாளே தவிர… நான் அங்கே போய் வாழப்போறது இல்ல. இன்ஷா அல்லாஹ்…அந்த பொண்ணும் இங்கே நல்லபடியாக வாழ்வாள்…. மாமிக்கும் நிம்மதியா இருக்கும் தானே அத்தா…. அதான் நான் மாமி பொண்ணையே கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன் அத்தா….” என்று சொன்னான்.

        “சாதிக் நீ சொல்றதெல்லாம் சரிதான்.அந்த பொண்ணு சின்ன வயசா இருக்கும் போது கையில் முழுக்க சூடான எண்ணெய் கொட்டி அதன் சதை சுருக்கமும்,தழும்பும் இருப்பதால் கை பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும் பா…. இதனாலேயே நிறைய பேர் பொண்ணு பார்த்துட்டு போயிடுறதா உங்க அம்மா கூட சொல்லிகிட்டு இருந்தாளே….”என்று வஹாப் கவலையான குரலில் சொன்னார்.

       “ஆமா… அத்தா நானும் அம்மா,மத்தவங்க எல்லாம் சொல்லி கேட்டிருக்கேன்.நான் அந்த பொண்ணை ரொம்ப சின்ன வயசுல பார்த்ததுதான்.இப்ப எப்படி இருக்கும்னு  கூட தெரியாது…ஒரு தடவை என் காது படவே  மாமிக்கிட்ட நம்ம ஊர் பொண்ணுங்க வந்து நல்ல பொண்ணுக்கே இந்த காலத்துல மாப்பிள்ளை அமைய மாட்டேங்குதே…. உன் பொண்ணை எப்படி நீ கரை சேர்ப்பன்னு கேட்டாங்க… அப்ப மாமி எதுவுமே பேசாம அழுததை பார்த்தப்ப தான் முடிவுப்பண்ணேன் அத்தா…. சொந்தக்காரங்களான நாமளே கை கொடுக்கலன்னா இப்படி கண்டவங்க பேசதானே செய்வாங்கன்னு அந்த பொண்ணை மனப்பூர்வமா நான் கல்யாணம் செய்துக்கணும்னு மனசுல நிய்யத்து வச்சேன். இப்ப சொல்லுங்க அத்தா…. நான் நினைக்குறது தப்பா இருந்தா நீங்க சொல்றப்படியே நான் கல்யாணம் செய்துக்குறேன்.”என்று அப்பாவின் பதிலை எதிர்ப்பார்த்தவனாய் நின்றிருந்தான்….

         கண் கலங்கியவாறு மகனை பார்த்த வஹாப், “ அந்த காலத்திலேயே கல்யாணம் என வீட்டில் பேச்சு எடுத்தா வயசு பசங்களுக்கு மனசுல பல கனவுகள் வர ஆரம்பிச்சிடும்.நமக்கு வர போற பொண்ணு இப்படி இருந்தால் நல்லா இருக்கும்,அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைகள்.அதை வெளியிலே சொல்றோமோ இல்லயோ அது வேறு விஷயம்.
இந்த காலத்துல அதை வெளிப்படையா வீட்டில் சொல்லி இப்படி ஒரு பொண்ணை பார்த்துட்டு வரணும்,இல்லை இப்படி ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என சொல்றதை தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.அப்படியிருக்க இந்த ஒரு உயர்ந்த எண்ணம் கொண்ட விஷயத்தை சொல்வதற்கு நீ ஏன் பா தயங்கணும்….. இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு பெரிய காரியத்தை செய்துடணும்னு நீ நினைக்கும் போது, உன் அத்தாவா என் வயசுக்கு இதற்கு நான் சம்மதிக்கலன்னா என்னை விட உள்ளத்தில் தாழ்ந்தவன் எவனுமில்லை பா….. இதற்கு எங்களது பரிபூரணம் சம்மதம்.என்ன ஜமீலா நான் சொல்றது சரிதானே?”என்று தன் மனைவியை பார்த்து சிரிக்க, “அப்பாடி… அல்ஹம்துலில்லாஹ்” என்பது போல் பெருமூச்சு விட்டு சிரித்தாள் ஜமீலா.

        “அல்ஹம்துலில்லாஹ்…. இவ்வளவு சீக்கிரம் நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கல அத்தா…. ஆனால் அதே சமயம் முதலில்  இதுல மாமிக்கும்,அவுங்க பொண்ணுக்கும் இதில் மனதார சம்மதமான்னு தெரிஞ்சுக்கணும்.இரண்டாவது கல்யாண செலவுகள் முழுவதும் நாமளே பார்த்துக்களாம் அத்தா…. நான் கை நிறைய சம்பாதிக்கிறேன்.அல்லாஹ் பரக்கத் செய்திருக்கிறான்.அதனால துணிமணி நகைகள் இன்னும் என்ன வேணுமோ நாமளே செய்திடலாம் அத்தா…. அம்மா உங்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் சொல்லுங்கம்மா….என்று சாதிக் கேட்க,
       நீ இதை ஏற்கனவே என்னிடம் சொன்னதுதானே சாதிக்…. அதனால நான் என் மனசுல எந்த எதிர்ப்பார்ப்பும் வச்சுக்கல பா…. நீ சந்தோஷமா என்ன நினைக்கிறியோ அதையே செய்திடலாம் சரியா”.என ஜமீலா கூறிவிட்டு,தன் கணவர் பக்கம் திரும்பி என்னங்க இப்பவே உங்க அக்காவுக்கு ஃபோனை போட்டு பேசுங்க… நல்ல விஷயத்தை ஏன் தள்ளி போடுவானேன்….” என்று கேட்க, “அதுவும் சரிதான்” என்றவாறு,தன் செல்ஃபோனில் எண்களை தட்டி தன் அக்காவிடம் விஷயத்தை சொன்னார்….

      “என்ன பா தம்பி சொல்ற?நம்ம சாதிக் சொல்றதை கேட்கும் போது எனக்கு பெருமையா இருக்கு பா…. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல…. சந்தோஷத்துல தொண்டைய அடைக்குது வேற வார்த்தையே வர மாட்டேங்குது… எனக்கு மணப்பூர்வ சம்மதம் தம்பி.”என்று பேசிவிட்டு முறைப்படி பேசி எழுதுவதற்கான தேதியை குறித்து விட்டு ஃபோனை வைத்தனர்.

      சாதிக்கின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்து போனது….. அன்றே அந்த வீட்டில் திருமண கலை கட்டியவாறு எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்… சாதிக் தன் அக்காவிடம் போய் அவள் காதோரம் மெதுவாக, “அக்கா… போய்ட்டு சும்மா அங்கே போய் மூக்குபிடிக்க சாப்பிட்டு வராம ஜெஸிமாவை ஃபோட்டோ எடுத்துட்டு வரணும்”.என்று சொல்ல  புன்சிரிப்போடு தன் தம்பியை செல்லமாக தட்டினாள் சாஜிதா….


Wednesday, April 12, 2017

வீடியோ பதிவேற்றம் ஆரம்பம்




எனது நீண்ட நாள் எண்ணமும்,ஆசையுமும் இறைவனின் உதவியால் இனிதே நிறைவேறியது.ஆம்!ஒரு வழியாக யூட்யூபின் வழியாக எனது சமையல் காணொளியை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்திருக்கின்றேன்.

அதில் சமையல் மட்டும் அல்லாது எனக்கு தெரிந்த அல்லது நான் அறிந்து கொண்ட விஷயங்களையும் அங்கே பகிரலாம் என்றே நினைக்கின்றேன்.எல்லோரும் அங்கே சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை நான் பதிவேற்றம் செய்த காணொளிகளின் லின்க் கீழே

1) நூடுல்ஸ் பேன் கேக்(நூடுல்ஸ் அடை)
******************************************

2)கறிவடகம்
**************

3) சக்கரவள்ளிகிழங்கு வட்டிலாப்பம்
**************************************

4) ஃபலாஃபில்
****************

5) க்ராச்செ வேலைப்பாடு செய்வது பற்றி
*******************************************

Monday, January 9, 2017

சிக்கன் பர்கர்(ஈஸி&ஹெல்தி)



தேவையான பொருட்கள்
**********************
சிக்கன் பேட்டீஸ்க்கு அரைக்க
**************************
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சைமிளகாய்-2
மல்லி மற்றும் புதினா தழை-சிறிதளவு
இஞ்சி,பூண்டு பேஸ்ட்-11/2 ஸ்பூன்
மிளகுத்தூள் -1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப

$இதர பொருட்கள்$
***************
பிரட் துண்டு -3(அல்லது)
பிரட் க்ரம்ஸ் -3/4 கப்
ப்ர்கர் பன் -5
முட்டை-1
மயோனைஸ்-2 மேசைக்கரண்டி
டொமேட்டோ கெட்சப்-2மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் -1 ஸ்பூன்
பட்டர் - 2 மேசைக்கரண்டி
விரும்பினால் லெட்டியூஸ் இலைகள்,சீஸ் வகைகள்

செய்முறை
**********
🍔 ப்ரட் க்ரம்ஸ் இல்லையெனில் ப்ரட் துண்டுகளை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
🍔 அரைக்க கொடுத்தவைகளை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் ப்ரட் பொடித்தது மற்றும் முட்டை உடைத்து அதில் ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

🍔 ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை மேசைக்கரண்டி பட்டர் போட்டு உருகியதும் மிதமான தீயில் வைத்து விட்டு உள்ளங்கையில் எண்ணெய் சிறிது தடவிக்கொண்டு,அரைத்த கலவையிலிருந்து பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பேட்டீஸாக வட்ட வடிவில் தட்டி தவாவில் விடவும்.இதே போல் நான்கு அல்லது ஐந்து ஒரே நேரத்தில் போட்டு இரு புறமும் நன்கு சிவக்க மிதமான தீயிலேயே சுட்டு எடுக்கவும்.

🍔 ஒரு கோப்பையில் மயோனைஸ் மற்றும் டொமேட்டோ கெட்சப்பையும் போட்டு அதில் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

🍔 பர்கர் பன்னை எடுத்து கொண்டு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
🍔 கலந்து வைத்திருக்கும் மயோனைஸ் கலவையை பன்னின் இரு உள்பக்கமும் தடவிவிட்டு,ஒரு புறம் இலை மற்றும் பாட்டின் வைத்து அதன் மேல் விரும்பினால் சீஸ் பேடையும்  வைத்து மறு பன் பாகத்தை வைத்து மூடி மேலே லேசாக பட்டர் தடவி தவாவில் சிறிது நேரம் வைத்து விட்டு எடுத்து விடவும்.

🍔 சுவையான,சத்தான,செய்வதற்கும்  எளிதான பர்கர் தயார்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.





Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out